அமெரிக்காவின் டென்னசியில் உள்ள பெட்ரோல் பங்கில் நான்கு பேர் கொண்ட ஒரு கும்பல் வித்தியாசமான முறையில் திருட்டு செய்த சம்பவம் வெளியேறி உள்ளது. இந்த கும்பல், பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் பால் பைதான் இனத்தைச் சேர்ந்த மலைப்பாம்புகளை பயன்படுத்தி, கடையின் ஊழியர்களின் கவனத்தை திசைதிருப்பிய பின்னர் திருட்டை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

 


அந்த வீடியோவில், ஒரு பெண் உட்பட நான்கு பேர் ஒரு கடைக்குள் நுழைகின்றனர். அப்போது அந்த பெண் கேஷியரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, மற்றொருவர் திடீரென மலைப்பாம்பை எடுத்து கவுண்டரில் வைக்கிறார். அதிர்ச்சியடைந்த கேஷியர் தன் செல்போனில் வீடியோ எடுக்க முயன்றபோது, அந்த பெண் அவருடைய போனை பறிக்க முயன்றார். பின்னர் மற்றொரு பாம்பை எடுத்து அதை  கவுண்டரின் முன் தொங்கவிட்டனர்.

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, அந்த கும்பல் சுமார் $400 மதிப்புள்ள CBD எண்ணெய்களை திருடிச் சென்றுள்ளனர். குற்றவாளிகள் மலைப்பாம்புகளை ஒரு முக்கிய ஆயுதமாகவே பயன்படுத்தியுள்ளதாக பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த மயூர் ராவல் தெரிவித்துள்ளார். “ஒருவர் வெள்ளை நிற பாம்பையும், இன்னொருவர் பிரவுன் நிற பாம்பையும் கொண்டு வந்தனர். அவர்கள் கவுண்டரில் பாம்புகளை சுற்றி வைக்க, எங்கள் கவனம் முற்றிலும் அதில் சென்று விட்டது,” என அவர் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக டென்னசி மாநில போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, அந்த கும்பலை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.