அமெரிக்காவின் விர்ஜினியாவில் இருக்கும் மனாஸ் பூங்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நரேஷ் பட்(33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மம்தா கப்லே பட் (28) என்ற மனைவி இருந்துள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த மம்தா செவிலியராக வேலை பார்க்கிறார். கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி மம்தா காணாமல் போய்விட்டார். ஆனால் நரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் கூகுளில் மறுமணம் குறித்து தேடி உள்ளார். மேலும் மனைவி இறந்தால்  கடன் என்னவாகும்? மனைவி காணாமல் போனால் என்ன நடக்கும்? போன்ற விஷயங்களை கூகுளில் தேடி உள்ளார்.

அவரது நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மம்தா வேலைக்கு வராததால் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஆகஸ்ட் 22ஆம் தேதி நரேஷின் வீட்டில் சோதனை செய்த போது படுக்கை அறையிலும், பாத்ரூமிடம் ரத்தக்கரை இருந்தது. அந்த ரத்தக்கரை மம்தாவின் ரத்தத்துடன் ஒத்திருப்பது டி.என்.ஏ சோதனையில் உறுதியானது. போலீசார் நரேஷை பிடித்து விசாரித்த போது மம்தா உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என கூறியுள்ளார். ஆனால் மம்தாவுக்கு அமெரிக்காவில் உறவினர்கள் கிடையாது.

மம்தா காணாமல் போவதற்கு சில நாட்களுக்கு முன்பு நரேஷ் ஒரு கடைக்கு சென்று மூன்று கத்திகளை வாங்கியுள்ளார். அது குறித்து போலீசார் கேட்டபோது நாங்கள் பிரிந்து செல்ல மட்டுமே முடிவு எடுத்தோம் என கூறியுள்ளார். நரேஷ் மம்தாவை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வீசி இருக்கலாம் என கூறப்படுகிறது. மறுமணம் செய்வதற்காக நரேஷ் தனது மனைவியை கொலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்த வாலிபர் மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.