மதுரையில் 2 வழிச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றம் செய்யப்படும் – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில் மதுரை ரிங் ரோடு சாலையில் 3 சுங்கச்சாவடிகள் ஏன்? என பேரவையில் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். சுங்கச்சாவடிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்பளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, செலவு அதிகமாக இருப்பதால், குறைந்த இடைவெளியில், 3 இடங்களில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும், சுங்கச்சாவடிகளில் 90% பணி முடிந்தால் கட்டணம் வசூலிக்கலாம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே சாலை பணிகள் தொடர்பான ஒப்பந்தம் வழங்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் தெரிவித்துள்ளார். மதுரை மக்கள் கோரிக்கையை ஏற்று 2 வழிச்சாலை, 4 வழிச்சாலையாக மாற்றம் செய்யப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளதால் விரைவில் பணிகள் தொடங்கும் என முதல்வர் பழனிசாமி தகவல் அளித்துள்ளார்.