ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில் பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இருப்பினும் அனைத்து தாக்குதலையும் இந்தியா தகர்த்தெறிந்தது. இரு நாடுகளும் போரை கைவிட வேண்டும் என அமெரிக்கா சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்த நிலையில் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தற்போது இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரியும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த நிலையில் போர் நிறுத்த முடிவை மீறி ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த முடிவு என்ன ஆனது? ஸ்ரீநகர் அருகே மீண்டும் வெடி சத்தம் கேட்கிறது. அமைதி நிலவும் என எதிர்பார்த்த மக்களுக்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.