நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், கிட்டத்தட்ட 3 1/2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக… மழை பெய்தாலும் சரி, மழை பெய்யாவிட்டால் சரி, புயல் அடித்தாலும் சரி, ஒரு ஆண்டு புயலே வராமல் போனாலும் சரி, எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்கின்ற ஒரே முழக்கத்தை எதிர்க்கட்சி தலைவர் வைத்துக் கொண்டிருக்கின்றார்.
இதை தொடர்ச்சியாக சொல்கிறார்கள். ஒரு சாமானியன் நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றார். மிகப்பெரிய மக்கள் செல்வாக்கை உருவாக்கி இருக்கின்றார். நாளைய தினம் கலைந்து விடும்… நாளை மறுநாள் கலைந்து விடும் என்கின்ற சொல்லப்பட்ட அரசை நான்காண்டு காலம் வெற்றிகரமாக நடத்திக் காட்டி இருக்கிறார், மக்களினுடைய முதல்வராக உயர்ந்திருக்கிறார்.
ஆனால் இந்த அரசை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கத்திலேயே தொடர்ச்சியாக இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகமும், அதனுடைய கூட்டணி கட்சிகளும் செயல்படுவதை நாம் பார்க்கின்றோம். எனவே வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்ற தமிழக முதல்வர் தலைமையிலான இந்த நல்லாட்சி தொடர்வதற்கு, இந்த ஆட்சியின் மீதான விமர்சனங்களை மக்கள் மன்றத்தில் இவர்கள் பரப்புரையாக கொண்டு செல்வார்கள்.
இந்த ஆட்சி மீதான விமர்சனங்களை அவர்கள் வைக்கின்ற போது அந்த விமர்சனங்களிலிருந்து இந்த ஆட்சியை பாதுகாப்பு அரணாக நானும் என்னோடு இணைந்து இருக்கின்ற தோழர்களும் தொடர்ச்சியாக செயல்பட வேண்டும் என்ற முடிவை எடுத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் எங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டு இருக்கின்றோம்.
இன்னும் நிறைய பொறுப்பாளர்கள், மாற்றுக் கட்சியில் இருக்கிற பொறுப்பாளர்கள் இணைய இருக்கின்றார்கள். இந்த மாதத்திலேயே தமிழக முதல்வர் தலைமையில் மிகப் பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்தி இணையவும் முயற்சி எடுத்துள்ளோம் என அதிமுகவில் இணைந்த கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.