தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனில் படிப்பை முடித்துவிட்டு தமிழகத்திற்கு திரும்பினார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அரசியலில் ஒவ்வொரு நாளும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். மாநாட்டுக்கு பின்னர் விஜய் எப்போதாவது வெளியே வந்தாரா என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக வெற்றி கழகத்தின் செய்தி தொடர்பாளர் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக வெற்றி கழக கொள்கைகள் குறித்து திட்டமிட்டு பரப்பப்படும் பொய் பிரச்சாரம் விளம்பர பேச்சுக்கள் முற்றிலும் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கருத்து ஆகும்.
தமிழக வெற்றி கழகம் மதசார்பற்ற சமூக நீதி என்ற கொள்கையினை முன்வைத்து பயணம் செய்கிறது. தமிழ் தேசியம் மற்றும் திராவிடம் என்ற எந்த அடையாளத்திற்குள்ளாகவும் சுருங்க விரும்பவில்லை என தலைவர் விஜய் கொள்கை பிரகடனம் மாநாட்டில் அறிவித்த பின்னரும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புரிதல் இன்றி பேசியுள்ளார். இது விளம்பர உத்தியாக நீண்ட நாள் கழித்து தமிழ்நாடு வந்த அவருக்கு ஒரு வெளிச்சம் தேடும் முயற்சியாகவே பார்க்கிறோம். தமிழக மக்கள் எல்லா வகை உணவையும் உண்பார்களே தவிர ஒரு காலமும் மதவாதம் என்னும் நஞ்சினை உண்ண மாட்டார்கள்.
ஒன்றிய ஆட்சியில் பாஜக அதிகாரத்தில் இல்லை என்றால் தமிழ்நாட்டில் இவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் சென்று விடுவார்கள். பன்முகத்தன்மை கொண்ட தேசத்தில் குறிப்பாக அதனை பெரிதும் போற்றும் தமிழக மக்கள் ஒற்றை உணவு போல “ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே தேர்வு” போன்ற திட்டமிடப்பட்ட பன்முக சிதவுகளை ஒரு காலமும் அனுமதிக்க மாட்டார்கள். 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தை தனி பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர வைத்து அறுசுவை உணவுடன் எங்கள் கொள்கை எதிரியான பாஜகவிற்கு,ம் அரசியல் எதிரியான திமுகவிற்கும் விருந்து வைப்பார்கள் என கூறியுள்ளார்.