நாகரீகம் என்ற பெயரில் நாம் உண்ணும் உணவு முறை மாறி வரும் காலகட்டத்தில், உணவு சாப்பிட்டதும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கான காரணம் என்னெவென்று பார்ப்போம்..!
இந்தியாவிலுள்ள மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு நெஞ்செரிச்சல் உள்ளது. இவர்களில் 100-ல் 20 பேருக்கு இது அன்றாட பிரச்சினையாகவும், மீதிப் பேருக்கு மழைக் காலத்தில் முளைக்கும் காளானைப் போல் அவ்வப்போது முளைக்கும் பிரச்சினையாகவும் உள்ளது.
வழக்கத்தில் இதை நெஞ்செரிச்சல் என்று சொன்னாலும் இது நெஞ்சு முழுவதும் ஏற்படும் பிரச்சினை அல்ல. இது உணவுக்குழாயில் ஏற்படுகின்ற பிரச்சினை.உடலின் வாய், மூச்சுக்குழாய்களில் தோன்றி தொண்டை வரை பரவும். மருத்துவ மொழியில் இதற்கு இரைப்பை அமிலத்தின் ஒழுக்கு நோய் என்று பெயர்.
இதற்கான காரணம் வாயில் போடப்பட்ட உணவு உமிழ்நீருடன் கலந்து முதற்கட்ட செரிமானம் முடிந்ததும், அதை இரைப்பை கொண்டு சேர்ப்பது தான். முக்கால் அடி நீளமுள்ள உணவுக்குழாயின் உட்பக்கம் சளிச்சவ்வு உள்ளது. இது உணவுக் குழாய்க்கு ஒரு கவசம் போன்று அமைந்து பாதுகாப்பை தருகிறது.
உணவுக்குழாயில் மேல் முனையிலும், கீழ் முனையிலும் தசையால் ஆன இரண்டு கதவுகள் உள்ளன. மேல் முனையில் இருக்கும் கதவு நாம் உணவை விழுங்கும்போது அது மூச்சுக்குழாய்க்குள் செல்வதைத் தடுக்கிறது. கீழ் முனையில் இருக்கும் கதவு இரப்பையில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாய்க்குள் நுழையவிடாமல் தடுக்கிறது.
இந்த கதவு உணவுக் குழாய்க்கும், இரைப்பைக்கும் ஒரு எல்லைக்கோடு போன்று செயல்படும். நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம் இரைப்பையில் சுரக்கும் அமிலம். இந்த எல்லைக் கோட்டைக் கடந்து உணவுக் குழாய்க்குள் தேவை இல்லாமல் நுழைவது தான். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், உணவுக் குழாயின் தசைகள் காரம் நிறைந்த, சூடான குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை.
இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும். மிகவும் இனிப்பான, காரமான கொழுப்பு மிகுந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டால் உணவுக் குழாயின் கீழ் முனைக் கதவு பழசாகிப் போன சல்லடை வலை போல தொள, தொளவென்று தொங்கி விடும்.
இதன் விளைவு இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்து விடும். இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தாலும், அது உணவுக் குழாயின் கீழ்ப் பகுதிக்குச் சென்று காயத்தை ஏற்படுத்தும், அதுதான் அல்சர் எனப்படும்.
இரைப்பையில் பிரச்சனை உள்ளவர்களுக்கு இப்படித்தான் நெஞ்செரிச்சல் அடிக்கடி ஏற்படும். வாயில் அழுத்தம் அதிகரித்தால் நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் பருமனாக உள்ளவர்கள், கர்ப்பிணிகள், இறுக்கமாக உடை அணிபவர்கள், வயிற்றில் கட்டி உள்ளவர்கள் ஆகியோருக்கு நெஞ்செரிச்சல் உண்டாக இதுவே காரணம்.
வழக்கமாக பெண்கள் சாப்பிட்ட பின்பு வீட்டை சுத்தம் செய்கிறேன் என்று, குனிந்து , நிமிர்ந்து வேலை செய்வார்கள். இதனால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து அமிலம் மேலேறி நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும். சிலருக்கு இரைப்பையில் இருந்து ஒரு பகுதி மார்புக்குள் புகுந்து உணவுக் குழாயை அழுத்தும்.
இதன் விளைவாக உணவுக் குழாயின் தசைகள் கட்டுப்பாட்டை இழந்துவிட, இதற்காகவே காத்திருந்தது போல் இரைப்பை அமிலம் உணவுக் வாயு எல்லாமே உணவுக் குழாய்க்குள் படையெடுக்க நெஞ்சு எரிச்சல் தொல்லை கொடுக்கும். பலருக்கு உணவு சாப்பிட்ட உடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். சிலருக்குப் பசிக்கும்போது ஏற்படும். பொதுவாக இந்தத் தொல்லை இரவு நேரத்தில்தான் அதிகமாக இருக்கும்.
நெஞ்சு எரிச்சலை தூண்டும் காரணிகள்:
- அதிக கார உணவுகள்
- துரித உணவுகள்
- நொறுக்கு தீனி உணவுகள் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது
- காலை உணவை தவிர்ப்பது
- சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது
- பசிக்கும் நேரத்தில் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடாமல் இருப்பது
- நொறுக்குத்தீனிகள் கொண்டு வயிற்றை நிரப்புவது
- இரவில் தாமதமாக உறங்குவது
- கவலை
- மன அழுத்தம்
போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தூண்டுகிறது.
நெஞ்செரிச்சலை உடனடியாகக் குறைக்க:
- இளநீர் சாப்பிடலாம்
- புளிப்பில்லாத மோர் குடிக்கலாம்
- நுங்கு சாப்பிடலாம்
- ஜெலுசில் போன்ற அமிலம் குறைந்துள்ள மருந்துகளை 15 மில்லி குடிக்கலாம்
இதில் எதுவும் கிடைக்காத நேரத்தில் குளிர்ந்த நீரை குடித்தால் போதும். நெஞ்சு எரிச்சல் குறையும்.
நெஞ்செரிச்சலை தடுப்பது எப்படி:
*நேரத்திற்கு உணவை சாப்பிடுங்கள்
*தேவையான அளவிற்கு சாப்பிடுங்கள்
*அதிகச் சூடாக எதையும் சாப்பிடாதீர்கள்
*காரம் மிகுந்த மசாலா கலந்த எண்ணெயில் பொரித்த கொழுப்பு நிறைந்த புளிப்பு ஏறிய உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
*ஒரே நேரத்தில் வயிறு நிறையச் சாப்பிடுவதை விட அடிக்கடி சிறிது சிறிதாக சாப்பிடலாம்.
*தக்காளிஜூஸ், ஆரஞ்சு, எலுமிச்சை, காபி, டீ, சாக்லெட், நூடுல்ஸ். பரோட்டா வாயு நிரப்பப்பட்ட பானம் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்வது நல்லது.
*வேகவைத்த ஆவியில் அவித்த உணவு மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.
*அவசர, அவசரமாக சாப்பிடுவது தவறு, அப்படி சாப்பிடும்போது உணவோடு சேர்ந்து காற்றும் இரைப்பைக்குள் நுழைந்துவிடும். பிறகு ஏப்பம் வரும் சமயங்களில் அமிலம் உணவுக் குழாய்க்குள் உந்தப்படும். இதனால் நெஞ்செரிச்சல் அதிகமாகும். வழக்கமாக உணவைச் சாப்பிட்டதும் இரைப்பை விரியும், அப்பொழுது இரைப்பையில் அழுத்தம் ஏற்பட்டால் உணவு குழாய்க்குள் அமிலம் செல்லும்.
*இதை தடுக்க இறுக்கமாக அணியப்பட்ட ஆடைகள் ஆகியவற்றை சிறிது தளர்த்திக் கொள்ள வேண்டும்.
*உணவை சாப்பிட்டபின் குனிந்து வேலை செய்யக் கூடாது.
*கனமான பொருளைத் தூக்கக்கூடாது.
*உடற்பயிற்சி செய்யக்கூடாது
*மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைகளை சாப்பிடக் கூடாது.
*முக்கியமான யோசனைகள் சாப்பிட்டவுடன் தூங்காதீர்கள். குறைந்தது இரண்டு மணி குறைந்தது 2 மணி நேரத்திற்கு பிறகு தூங்கச் செல்லுங்கள்.
*வலதுபுறமாக படுப்பதை விட இடது புறமாக திரும்பி தூங்குவது நெஞ்சு எரிச்சலை குறைக்கும்.
*மது அருந்துவது, புகை பிடிப்பது, புகையிலை பான்மசாலா போடுவது நெஞ்செரிச்சலுக்கு முக்கிய எதிரிகள்.
புகையிலையில் உள்ள நிகோட்டின் இரைப்பையின் அமிலத்தை அதிகரிப்பதோடு, அமில சுரப்பை அதிகரித்து உணவுக் குழாயின் தசைக் கதவுகளையும் தளரச் செய்வதால் நெஞ்செரிச்சல் அதிகமாகிவிடும். உடனே உங்கள் உடல் எடையை பராமரியுங்கள், அப்புறம் பாருங்கள் நெஞ்செரிச்சல் உங்களிடம் இருந்து நிரந்தரமாக விடை பெற்று விடும்.