
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த அறிக்கை வெளியிட்டுள்ளார். அதோடு நாளை தமிழ் புத்தாண்டு பண்டிகைக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொதுவாக சித்திரை 1ஆம் தேதி தான் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவது வழக்கம். இப்படி இருக்கையில் நாளை தான் தமிழ் புத்தாண்டு என்று விஜய் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு தை 1ஆம் தேதி தான் தமிழ் புத்தாண்டு பண்டிகை என்று கலைஞர் கருணாநிதி அறிவித்தார்.
ஆனால் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக கட்சியில் ஜெயலலிதா அம்மையார் சித்திரை 1ஆம் தேதி தான் தமிழ் புத்தாண்டு என்று மாற்றி அறிவித்தார். இதன் காரணமாக சர்ச்சை வெடித்தது. தமிழகத்தில் சீமான் உட்பட தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர்கள் நாளை தான் தமிழ் புத்தாண்டு என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தில் நடிகர் விஜய்யும் அரசியல் செய்வதாக கூறப்படுகிறது. ஏனெனில் கருணாநிதி முன்பு அறிவித்தது போன்று தற்போது நாளை தான் தமிழ் புத்தாண்டு என்று விஜயும் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
பொங்கல் திருநாள்!
உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.
2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்!
இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்.
அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!