சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்பா மாவட்டத்தில் சந்த்ராம் மஞ்ச்வார்(49) என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் தனது குடும்பத்துடன் ஆடு மாடு மேய்க்கும் வேலை பார்த்து வந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதியவரும் அவரது குடும்பத்தினரும் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சந்த்ராமிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. சந்த்ராம் மஞ்ச்வார் முதியவரின் குடும்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்குமாறு அடிக்கடி கூறியுள்ளார். அதற்கு முதியவர் மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த சந்த்ராம் மஞ்ச்வார் ஐந்து பேருடன் இணைந்து முதியவரையும் அவரது நான்கு வயது பேத்தியையும் கொலை செய்துள்ளார்.

அதன் பிறகு 16 வயது சிறுமியை கடத்தி காட்டுப்பகுதியில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் சிறுமியை கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல சந்த்ராம் மஞ்ச்வார் நாடகமாடியுள்ளார்.

இந்த வழக்கில் சந்த்ராம் மஞ்ச்வார் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த மாவட்ட விரைவு நீதிமன்றம் சந்த்ராம் மஞ்ச்வார், அப்துல் ஜப்பார், அணில் சாத்தி, ராம், ஆனந்த் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்தது. மற்றொரு குற்றவாளி உமா சங்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.