தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்கக் கடலின் தெற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும். இன்று தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.