டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற் பயிருக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை இன்னல்களாகிய வறட்சி, புயல், வெள்ளம் ஆகியவற்றிலிருந்து மக்களை காக்கும் முன்னேற்பாடுகளை மேற்கொள்வதிலும், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பாக விவசாய பெருங்குடி மக்களுக்கு தேவையான நிவாரணங்களை அளிப்பதிலும் முனைப்புடன் செயல்பட வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 4 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருவதால் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர் பயிரிடப்பட்ட நிலையில், 20 ஆயிரம் ஏக்கரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது என்றும், எஞ்சியுள்ள ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த 4 நாள் தொடர் மழை காரணமாக மழைநீர் தேங்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏற்கனவே அறுவடை செய்த நெல்லையும் காய வைக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும், மழை நீடித்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 20,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உளுந்து, பயறு போன்றவற்றை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் நெல் மற்றும் கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்..

தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக வயல்களில் தேங்கி அறுவடை செய்ய முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், இதர பயிர்களுக்கு தற்போதுள்ள உற்பத்தி செலவுக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும், அறுவடை செய்யப்பட்ட நெல்லை காய வைக்க இயலாததன் காரணமாக நெல்லின் ஈரப்பத அளவை 17 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாக உயர்த்தி நெல் கொள்முதல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் 2021 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் அறிக்கை விடுத்தேன் ஆனால் அவர் விடுத்த கோரிக்கையே அவரால் நிறைவேற்றப்படவில்லை தற்போது திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து 20 மாதங்கள் கடந்துள்ள நிலையில் தற்போதாவது ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை இந்த அரசு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு விவசாய பெருங்குடி மக்களிடையே எழுந்துள்ளது.

விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்கும் வகையில் உடனடியாக ஓர் ஆய்வு மேற்கொண்டு அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்கிடவும், நெல்லின் ஈரப்பதத்தை 17 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக உயர்த்தி கொள்முதல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இதர பயிர்களுக்கு உற்பத்தி செலவுக்கேட்ப நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.