பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக விழுப்புரத்திற்கு சென்றுள்ளார். அவர் இருவேல்பட்டு பகுதிக்கு சென்றபோது காரில் இருந்தபடியே அவர் பார்வையிட்டதாக தெரிகிறது.
ஏற்கனவே அந்த பகுதி மக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அமைச்சரை பார்த்ததும் கோபமடைந்த கிராம மக்கள் அவர் மீது சேற்றை வாரி இறைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.
இது குறித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியவர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள். பாஜக மகளிர் அணியில் உள்ள விஜய ராணியும், அவரது உறவினர் ராமர் என்கிற கிருஷ்ணனும் சேர்ந்து உள்நோக்கத்துடன் அதை செய்துள்ளனர். அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாததால் பின் வாசல் வழியாக திமுகவை களங்கப்படுத்த பாஜக முயல்வதாக சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார்.