கடந்த 1960ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தம், தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கும் நிலையில், உலக வங்கியின் புதிய பதிலைப் பெற பாகிஸ்தான் முயற்சி செய்தது. ஆனால், இந்த முயற்சிக்கு உலக வங்கியிடமிருந்து கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. “இந்தியாவை எங்களால் தடுக்க முடியாது. இது அவர்களுக்குள் உள்ள பிரச்சனை. நாங்கள் தலையிடமாட்டோம்” என உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா தெளிவாக தெரிவித்துள்ளார்.

அண்மையில், ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், இந்தியா தனது நிலைப்பாட்டை கடுமையாக எடுத்துக் கொண்டு, சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்தும் நடவடிக்கையை எடுத்தது. இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததும், இந்திய அரசை கடுமையான முடிவெடுக்க தூண்டியது. இது தொடர்பாக, பாகிஸ்தான் உலக வங்கியின் தலையீட்டை எதிர்பார்த்து வந்தது. ஆனால், உலக வங்கி சமரச நடுவர் அல்ல என்று  தெரிவித்துள்ளது.

சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய நதிகளின் நீரை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ள 1960ல் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு, உலக வங்கி மத்தியஸ்தராக இருந்தது. ஆனால் தற்போது, இந்தியா தனது பபாதுகாப்பு மற்றும் உள்நாட்டு நீர்வள திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்காக இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. இந்திய அரசின் நடவடிக்கைகள் சட்டப்படி சரியானவை என்றும், உலக வங்கி அதில் எந்தப் பங்கும் வகிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையிலேயே, பாகிஸ்தான் மீண்டும் உலக வங்கியை நம்பி தங்களது பக்கம் கவர முயன்றபோதும், அவர்களுக்கு சரிவரவில்லை என்பதே தற்போது வெளிப்பட்டுள்ளது. “உலக வங்கியின் பங்கு ஒருங்கிணைப்புப் பணி மட்டுமே. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களது முடிவு” என அஜய் பங்கா கூறியுள்ளதால், பாகிஸ்தானின் எதிர்பார்ப்பு  முடங்கியுள்ளது. இந்தியாவின் நீர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீது உலக வங்கி தடை விதிக்காது என்பது தற்போது உறுதியாகியுள்ளது.