திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் சாக்லேட்டில் பீடி துண்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் ஆரோக்கிய மாதா தெருவைச் சேர்ந்த 35 வயதான கமலக்கண்ணன் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு உறவினரின் குழந்தைக்கு கமலக்கண்ணன் சாக்லேட் வாங்கிக் கொடுத்துள்ளார். சாக்லெட்டின் கவரை பிரித்து குழந்தையிடம் கொடுக்க முயன்றபோது அதில் பாதி புகைத்த பீடி துண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கமலக்கண்ணன் கடைக்காரரிடம் முறையிட்டபோது வேறு சாக்லேட் தருவதாக கூறினார்.
இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு அவர் தகவல் கொடுத்தார். உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் தலைமையிலான அதிகாரி அங்கு வந்து சாக்லேட்டில் கிடந்த பீடி துண்டை பார்வையிட்டனர். பின்னர் அந்த கடையில் இருந்த அனைத்து சாக்லேடையும் பறிமுதல் செய்ததோடு கடைக்காரருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஆய்வு முடிவு வந்த பின்னரே கடைக்காரர் மற்றும் சாக்லெட் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.