கந்துவட்டி வழக்கு தொடர்பாக 116 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
தமிழக டிஜிபி உத்தரவின்படி கந்துவட்டி மூலம் உயிரிழப்பை தடுக்கும் பொருட்டு ஆபரேஷன் கந்துவட்டி என்ற சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களில் 77 வழக்குகள் கந்துவட்டி தொடர்பாக பதிவு செய்யப்பட்டது. இதில் 116 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து 39 வீடுகளில் சோதனை செய்யப்பட்டு சொத்து பத்திரங்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கந்துவட்டி தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கந்துவட்டி சம்பந்தமான குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை செய்வதற்கும், அவர்களை உடனடியாக கைது செய்வதற்கும் விரைவாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் கந்துவட்டி தொடர்பாக எந்த புகார்கள் வந்தாலும் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.