கடந்த ஜூலை 11-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தை நாடி இருந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் தொகுதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அதிமுகவின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் வேட்பாளரை நிறுத்த ஜி.கே வாசனிடம் ஆதரவு கோரியது இபிஎஸ் அணி.
இந்நிலையில் ஜி.கே.வாசன் விட்டுக் கொடுக்க ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக தென்னரசு நிறுத்தப்பட்டுள்ளார். இபிஎஸ் அணிக்கு போட்டியாக ஓபிஎஸ் தரப்பில் செந்தில் முருகனை வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அறிவித்தது மட்டுமல்லாமல் வேட்பு மனுவையும் தாக்கல் செய்து அதிர்ச்சி அளித்தனர். இந்நிலையில் இறுதிவரை எந்த தரப்பினருக்கும் ஆதரவளிக்காமல் தனி வேட்பாளரை அறிவிக்காமல் இருந்து வந்த பாஜக தலைமை சமரசத்தில் ஈடுபட தொடங்கியது. இதனிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வேட்புமனுவை தாக்கல் செய்யாமல் காத்திருந்து இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வழங்கக்கோரி இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர் .இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இருதரப்பினரையும் உள்ளடக்கிய பொதுக்குழுவை அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் கூட்டி பொது வேட்பாளரை தேர்வு செய்யவும் இரட்டை இலை சின்னத்தை அங்கீகரிக்கும் படிவத்தில் தமிழ் மகன் உசேன் கையொப்பமிடும் விதமாகவும் உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர்களின் கடிதத்தை பெரும் விதமாக தமிழ் மகன் உசேன் இறங்க, ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அவை தலைவர் நடுநிலையோடு செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ் மகன் உசேனின் செயல்பாட்டுக்கு எதிராக ஓபிஎஸ் அணி உச்ச நீதிமன்றத்தை நாடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் வேட்பாளரை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓபிஎஸ்க்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசை பாஜக ஆதரிப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்ட தீர்ப்பு ஓபிஎஸ் தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வதாக அறிவித்துள்ளனர்.
பொதுக்குழு செல்லும் பட்சத்தில் அந்த குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடர்வார். மேலும் ஓபிஎஸ் அணியினரை திமுகவிலிருந்து நீக்கி நிறைவேற்றிய தீர்மானமும் செல்லும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட நீடிக்க முடியாத நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை ஓபிஎஸ் தரப்பினர் எப்படி ஆதரிக்க போகின்றார்கள். இன்னும் நான்கு நாட்களில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்ற நிலையில் என்ன செய்யப் போகிறார்கள் ஓபிஎஸ் அணியினர் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. ஒருவேளை இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டு வெற்றி பெற முடியாவிட்டாலும் இபிஎஸ் தரப்புக்கு செல்லும் குறிப்பிட்ட சதவீத வாக்குகளையாவது தன்வசப்படுத்தி இருக்கலாம். ஆனால் தற்போதைய நிலையில் இடைத்தேர்தலில் அதிமுக தோற்கும் பட்சத்தில் எங்கள் ஆதரவு இல்லாததால் தான் வெற்றி பெற முடியும் எனக் கூறி ஆறுதல் படுத்திக் கொள்ள மட்டும்தான் ஓபிஎஸ் தரப்பினரால் முடியும்.