கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையம் சாலை சிவா நகரில் ராஜேந்திர குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். ராஜேந்திர குமாருக்கு பூர்வீகம் ராஜஸ்தான் மாநிலம். இவர் திருப்பாதிரிப்புலியூர் நந்தவெளி சாலையில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த வியாழக்கிழமை ராஜேந்திர குமார் கடை ஊழியர்களை பணி நிமித்தமாக வெளியே அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில் கடைக்கு ஒரு நபர் பொருட்கள் வாங்குவது போல வந்துள்ளார்.

திடீரென அவர் ராஜேந்திர குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஜேந்திரகுமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.