சென்னை புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம் (வடக்கு, தெற்கு) அரக்கோணம், ராமநாதபுரம், சிவகங்கை, கரூர் ஆகிய மாவட்டங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. அங்கு மது வாங்குபவர்களுக்கு ரசீது கொடுக்கப்படுகிறது. கடை விற்பனையாளர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றாமல் தவறான செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்த நிலையில் மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் வேளாண்மை இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மது குடிப்பவர்கள் விரும்பி கேட்கும் மதுபானங்களுக்கு ரசீதுகளை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
மதுபானங்களை விற்பனை செய்யும் போது மட்டுமே பாட்டிலை ஸ்கேன் செய்து விற்க வேண்டும். முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக்கொண்டு விற்பனை செய்யக்கூடாது. இதனால் விற்பனைக்கும் இருப்புக்கும் வித்தியாசம் ஏற்படுகிறது. அதை கடைக்காரர்கள் சரி செய்ய வேண்டும். இந்த நிலையில் தவறான செயல்பாடுகளை கண்காணிக்க தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் மற்றும் உதவி மேலாளர் முழு பொறுப்பாவதோடு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் மது பிரியர்கள் வாங்கும் சரக்குக்கு ஏற்றவாறு அவர் முன்பு ஸ்கேன் செய்து ரசீது கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.