ஆதிராவிடர் என்பதை பழங்குடியினர் அல்லது வேறு ஏதாவது தமிழ் வார்த்தையில் மாற்றுவதற்கான வழிமுறைகள் உள்ளதா ? என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடுபட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தைக் கொண்டு செல்ல மயானத்திற்கு உரிய பாதை இல்லாததால் வயல்களுக்கு நடுவே பொதுமக்கள் சுமந்து அடக்கம் செய்தது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரத்தை நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் குடி இருப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் எத்தனை ? ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் இடங்களில் குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளதா என வினவினார். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் வசிக்கும் இடங்களில் இருந்து மயானம் செல்வதற்கான பாதை வசதி முறையாக செய்யப்பட்டுள்ளதா ?
மேலூர் நடுப்பட்டு கிராமத்தில் எப்போதும் உரிய வசதி செய்து தரப்படும் ? ஆதிதிராவிடர் என்ற பெயரை பழங்குடியினர் அல்லது வேறு ஏதாவது தமிழ் வார்த்தையில் மாற்றுவதற்கான வழிமுறைகள் உள்ளதா ? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இதுகுறித்து வருவாய் துறை தலைமை செயலர் பதில் அளிக்க உத்தரவிட்டு. வழக்கு விசாரணையை டிசம்பர் 23-ம் தேதி ஒத்திவைத்தனர்.